நடுவின்றி நன்பொருள் வெஃகின்
சமண சமயத்திற்கு நல்லறம்1என்றே பெயர். நல்லறம் இரண்டு வகைப்படும்2.
அவை முறையே இல்லறம், துறவறம் எனப்படும். இல்லறம் வடமொழியில்
சிராவகம் என்றும் பாகதத்தில் சாவகம்3 என்றும் அழைக்கப்படுகிறது.இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை அணுவிரதம் என்றும் துறவறத்தார்
கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்களை மகாவிரதம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அணுவிரதங்கள்4 ஐந்து. அவைகள்,
அணுவிரதம்
1.அகிம்சை (கொல்லாமை)
2.சத்தியம் (பொய்யாமை)
3.அஸ்தேயம் (திருடாமை)
4.பிரம்மசர்யம் (பிறன்மனை நயவாமை)
5.பரிமித பரிக்கிரகம் (நன்பொருள் வெஃகாமை)
சமண இல்லறத்தார் கடைப்பிடிக்கவேண்டிய ஐந்து ஒழுக்கங்களின்
கடைசியாகக் கூறப்படுவதுதான் மிகுபொருள் விரும்பாமை5 என்னும்
விரதமாம். அவற்றை ஈண்டு பார்போம்.
மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தில் மிகுபொருள் விரும்பாமை என்னும் விரதத்தைப்
பற்பல சொற்களில் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். நன்பொருள் வெஃகாமை,
பொருள் வரைதல், மிகுபொருள் உவாவாமை போன்றவைகள் அவற்றுள் சில.
மிகுபொருள் விரும்பாமை ஓர் அறமாக, இல்லறத்தார் ஒழுக்கமாக வலியுறுத்தியச்
சமயம் சமணம் தான். சமூகத்தில் ஒருசாராரிடம் மட்டுமே பொருள் சேர்ந்தால்,
சமூகம் சீர்க்குலையும் என்பதனை என்றோ உணர்ந்து ஓர் அறமாக கொள்ளப்பட்டது
மிக சிறப்புடைத்தாம். மிகுதியான பொருள் உடையவர்கள் மற்றவர்களுக்கு
அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கவே இந்த அறம்/ஒழுக்கம் கூறப்பட்டிருக்குமோ
என்று எண்ணத் தோன்றுகிறது6.
ஏனெனில், சமணம் இல்லறத்தாருக்கு நான்கு வகை தானங்களை கடைப்பிடிக்கச்
சொல்கிறது. அவை,
1. அன்னதானம்
2. அடைக்கல தானம்
3. மருத்துவ தானம்
4. கல்வி தானம்
என்பனவாம். இந்த தானங்கள்7, துறவறத்தாரின் தவத்திற்கு இணையாகவும்
சொல்லப்படுகிறது என்பது ஈங்குக் குறிப்பிடத்தக்கது. பெரும் பொருள் படைத்தவர்கள்,
இந்த தானங்களை கொண்டு ஏழைகளுக்கும், இரந்தார்களுக்கும், அனாதைகளுக்கும்
உதவவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
திருக்குறளில் மிகுபொருள் விரும்பாமை
தமிழ்ச் சமண இலக்கியத்தின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் இந்த
விரதம் (மிகுபொருள் விரும்பாமை) சொல்லப்பட்டிருக்கிறதா? என்றுப் பார்ப்போம்.
வெஃகாமை8 என்னும் அதிகாரத்தில் மிகுபொருள் விரும்பாமை குறிப்பிடப்பட்டிருக்கிறது!
அக்குறள்,
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் – திருக்குறள் (171)
இக்குறளுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுகிறார்,
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன்
அன்று ‘என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை’ ஒருவன்
வெஃகுமாயின்; குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல்
அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே
அவனுக்குக் கொடுக்கும்.
குடியை வளரச் செய்து பல நன்மையும் பயக்கும் இயல்பு பற்றி, வெஃகின்
என்பார், ‘நன்பொருள் வெஃகின்’ என்றார். பொன்ற என்பது ‘பொன்றி’
எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.
என்றும்,
மணக்குடவர் அதே குறளுக்கு,
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின், அதனானே
குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம்
இது சந்தான நாச முண்டாமென்றது.
என்றும் பொருள் செய்திருக்கிறார்.
இங்கே “நன்பொருள்” என்பதுதான் அந்தக் குறளின் குறிச் சொற்றொடர்.
நன்பொருள் என்பதற்கு பெரிய/பெரும் பொருள் என்றும் பொருள்படும்.
எப்படியெனின், நன்றாக மழைப் பொழிந்தது என்றால் பலத்த/பெரும்
மழைப் பெய்தது என்று பொருள் கொள்கிறோம். இன்னுமொரு காட்டுப்
பார்ப்போம். அவன் நன்றாக அடித்துவிட்டான் என்றால் கடுமையாக/பெரிதாக
அடித்துவிட்டான் என்றுப் பொருள் படுவதுபோல், நன்பொருள் என்பதற்கு
மணக்குடவர் கூறுவதுபோல் ”மிக்க பொருள்” என்றுப் பொருள் கொண்டால்
அக்குறள் முழுமைப் பெறும். மேலும் தொல்காப்பியம் “நன்று பெரிதாகும்9”
என்று கூறுவதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். இதனால்,
பரிமேலழகர் உரை இங்கு சிறப்பில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.
சமூகத்தில் ஒருசாரார் பேராசையால் பெரும் பணம் சேர்த்துக் கொண்டே போனால்,
நாட்டில் சமூக வாழ்வு நடுவு நிலைமையின்றிக் குன்றிப்போகும், திருட்டு
முதலான குற்றங்கள் பெருகும், ஏழை, எளியோர் இன்னல் கொள்வர்,
வறுமைத் தலைவிரித்தாடும் என்பதால், சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க
சமணம் இல்லறத்தாருக்கு “பொருள் வரைதல்10” என்ற விரதத்தை/ஒழுக்கத்தை
வலியுறுத்துகின்றது.
இரா.பானுகுமார்,
சென்னை
=====================================================
அடிக்குறிப்பு:
1. தொல்அறமே படையாய் உடை அச்சுத நாயகன்தன்
நல்லறம் மேவி இந்நாற்கதி நீக்கிலர் தீக்கதி சேர்ந்து
அல்அறம் மேவுவர் என்(று) அறைத்தாலும் அறிவிலிகள்
புல் அறம் மேவுவர் போகத்தின் மேலுள்ள மோகத்திலே – திருநூற்றந்தாதி (36)
2. இல்லறம் ஏனைத் துறவறம் என்றுஇவற்றைப்
புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)
3. சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் – சிலப்பதிகாரம் – கொலைக்களக் காதை(20)
4. அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்
உணர்நான்கு சிக்கா வதம் = அருங்கலச் செப்பு (65)
5. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார் பொய்
உரையார் களவினை ஒழுகார் பிறர்மனை
உவவார் மிகுபொருள் உவவார் வெம்
கரையால் உணர்வினை அழியார் அழிதசை
துவ்வார் விடமென வெவ்வாறும்
புரையார் நறவுனை நுகரார் இரவுணல்
புகழார் குரவரை இகழாரே – திருக்கலம்பகம் (67)
6. செல்வத்தைப் பெற்றார் சினம்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு – நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃது என்பார்
வானகத்து வைப்பதுஓர் வைப்பு – அறநெறிச்சாரம் (178)
7. “பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே” - நரிவிருத்தம் (35)
8. வெஃகாமை என்பதற்கு பரிமேலழகர் பிறர்க்குரிய பொருளை வெளவக் கருதாமை என்றும் மணக்குடவர் பிறர் பொருளை விரும்பாமை என்றும் பொருள் கொண்டிருக்கிறார்கள். இது பொருத்தமாகயில்லை. பிறர்ப் பொருள் விரும்பாமை என்பதைக் குறிக்க “கள்ளாமை” என்ற தனி அதிகாரம் சொல்லப்பட்டிருக்கும்போது வெஃகாமை என்பதற்கும் பிறர் பொருள் விரும்பாமை என்று பொருள் கொள்வது சிறந்ததாகப்படவில்லை. வெஃகாமை என்பதற்கு பொருள் வரைதல் அஃதாவது மிகுபொருள் வரைதல் என்ற கருத்தில் எடுத்தாண்டால் பொருள் சிறக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
9. "நன்று பெரிதாகும்" - தொல்காப்பியம் 2-8-46
10. பெரிய கொலை பொய் களவொடு காமம்
பொருளை வரைதலோடு ஐந்து – அருங்கலச் செப்பு (66)
No comments:
Post a Comment